

மொகாதிசு,
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்திய பெருங்கடல் அமைந்துள்ள இந்நாட்டில் கடற்கொள்ளையர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்திய பெருங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை சிறைபிடித்து கடற்கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கமரூன் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் கடந்த வாரம் திங்கட்கிழமை துருக்கி நாட்டில் இருந்து ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ஆப்பிரிக்காவில் உள்ள ஒருநாட்டிற்கு சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் 6 இந்தியர்கள் உள்பட 10 மாலுமிகள் பயணித்தனர்.
இந்திய பெருங்கடலில் சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாணம் இயல் மாவட்டத்தில் இருந்து 4 நாட்டிகல் மைல் தொலைவில் சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த சரக்கு கப்பலுக்குள் நுழைந்த கடற்கொள்ளையர்கள் மாலுமிகளை சிறைபிடித்து கப்பலை கடத்தி சென்றனர்.
இந்த கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து சோமாலியா கடற்படையினருடன் இணைந்து துருக்கி கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, சோமாலியாவின் வடகிழக்கே தன்னாட்சி பெற்ற பண்ட்லெண்ட் மாகாணம் கடாப் ஜிரன் மாவட்டம் அருகே கடலில் சரக்கு கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. சரக்கு கப்பலை மீட்க முயற்சித்தபோது கடற்கொள்ளையர்கள் பாதுகாப்புப்படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் கடற்கொள்ளையர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல் மீட்கப்பட்டது. அதில் இருந்த 6 இந்தியர்கள் உள்பட 10 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.