வயதான பெற்றோரை கைவிட்டால் 6 மாதம் சிறை - மத்திய அரசு சட்டம் திருத்தம் கொண்டு வருகிறது

வயதான பெற்றோரை பிள்ளைகள் கைவிட்டால் அவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கிறது.
வயதான பெற்றோரை கைவிட்டால் 6 மாதம் சிறை - மத்திய அரசு சட்டம் திருத்தம் கொண்டு வருகிறது
Published on

புதுடெல்லி,

பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை அவர்களது முதுமை காலத்தில் உடன்வைத்து காத்து பராமரிக்க வேண்டி கடமை பிள்ளைகளுக்கு உண்டு.

ஆனால் இந்த கடமையை இன்றைய தலைமுறை பிள்ளைகள் எளிதாக துறக்கின்றனர். இதனால் வயதான காலத்தில் பெற்றோர் அல்லாடுகிற நிலை உள்ளது. அவர்களை கவனிக்க யாருமற்ற சூழலும் உருவாகிறது. இது அவர்களை மன உளைச்சலில் தள்ளுகிறது. ஒரு கட்டத்தில் விபரீத முடிவு எடுக்கவும் வைக்கிறது.

இது பிரதமர் அலுவலகத்தின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. இதையடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சமூக நலம் மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.

அதன்பேரில் அந்த அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. தற்போது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு, நலச்சட்டம்-2007-ன்படி, வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்காமல், பிள்ளைகள் கைவிட்டால் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்க முடியும்.

இப்போது இந்த சட்டத்தை திருத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தண்டனை 3 மாதத்தில் இருந்து 6 மாதமாக அதிகரிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஒரு சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அது பிரதமர் அலுவலகத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தண்டனையை அதிகரிப்பதுடன் வயதான பெற்றோரை, மூத்த குடிமக்களை பாதுகாக்கிற கடமை யாருக்கெல்லாம் உண்டு என்பதற்கான உறவு வரம்பினை விரிவுபடுத்தவும் வரைவு மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், குழந்தைகள் மட்டுமின்றி தத்து குழந்தைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் ஆகியோருக்கும் மூத்த குடிமக்களை காக்கிற கடமை உண்டு என்பது சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படுகிறது.

தற்போது மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள் மட்டுமே சட்ட வரம்புக்குள் வருகிறார்கள்.

தற்போது பராமரிப்பு தொகையாக பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் வரை தரலாம் என்றிருக்கிறது. இந்த வரம்பை நீக்கி விட்டு, இப்போது பிள்ளைகள் நல்ல சம்பளம் பெறுவதால் அதற்கு ஏற்ற வகையில் பெற்றோருக்கு கூடுதல் தொகையை பராமரிப்பு செலவாக தரவும் சட்ட திருத்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com