

சண்டிகார்
பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட போதை பொருள் கடத்தல் கும்பல் டிரோன்கள் உதவியுடன் எல்லை கடந்து ஊடுருவி நாட்டுக்குள் போதை பொருட்களை கடத்த முயன்றது கடந்த காலத்தில் தெரிய வந்தது. அதனை போலீசார் எல்லை பகுதியிலேயே தடுத்து, கைப்பற்றினர்.
இந்நிலையில், இந்த போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்களை கண்டறியும் பணியில் பஞ்சாப் போலீசார் ஈடுபட்டனர். இதில், பணியில் உள்ள ராணுவ அதிகாரி, முன்னாள் போலீஸ் அதிகாரி, 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி பஞ்சாப் டி.ஜி.பி. கவுரவ் யாதவ் கூறும்போது, போதை பொருள் கடத்தல் கும்பல் கைது நடவடிக்கையின்போது, அவர்களிடம் இருந்து 4.8 கிலோ எடை கொண்ட ஹெராயின், ரூ.30 ஆயிரம் பணம், ஒரு பிஸ்டல் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் மற்றும் ஜீப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார். கைது செய்யப்பட்டவர்களில் ஜர்னைல் சிங் என்பவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
அவருடன் பஞ்சாப் காவல் துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அமர்தீப் சிங், டிம்பிள் ராணி, ராமன்தீப் கவுர், சரப்ஜித் சிங் மற்றும் அமிரித்பால் சிங் என 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சர்வதேச அளவிலான போதை பொருள் கடத்தல் கும்பலுடன் ராணுவ அதிகாரி மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரி தொடர்பில் இருந்தது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.