

புதுடெல்லி,
நாட்டில் கொரோனா 2வது அலையில் முதல் அலையை விட அதிக பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். தடுப்பூசி கண்டறியப்படுவதற்கு முன்பே தொற்று விகிதம் குறைந்திருந்த நிலையில், தடுப்பூசிகள், மருந்துகள், படுக்கைகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகளவில் காணப்படுகின்றன.
கொரோனா நோயாளிகளை ஊர் மக்களே ஒதுக்குவதும், உயிரிழந்தவர்களின் உடல்களை ஆற்றில் வீசி செல்லும் உறவுகளும் உள்ள சூழ்நிலையில், கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதற்காக தங்களது வாழ்வையே அர்ப்பணித்து செயல்பட கூடிய செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோரும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் கவச உடைகளை அணிந்து சென்றாலும் தொற்றில் சிக்கி உயிரிழக்கும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், இந்திய மருத்துவ கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றில், கொரோனா 2வது அலையில் இதுவரை மொத்தம் 624 டாக்டர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
இவர்களில் டெல்லியில் அதிக அளவாக 109 பேர் உயிரிழந்து உள்ளனர். பீகாரில் 96 பேர், உத்தர பிரதேசத்தில் 79 பேர், ராஜஸ்தானில் 43 பேர், ஜார்க்கண்டில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த பட்டியலில் 6வது இடத்தில் ஆந்திர பிரதேசம் (34) உள்ளது. தெலுங்கானா (32), குஜராத்தில் (31), மேற்கு வங்காளம் (30), மராட்டியம் (23) மற்றும் ஒடிசா (22) ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. தமிழகம் (21 பேர்) 12வது இடத்தில் உள்ளது. இந்த மாநிலங்களில் மிக குறைந்த அளவாக புதுச்சேரியில் ஒரு மருத்துவர் உயிரிழந்து உள்ளார்.