

புதுடெல்லி,
தமிழக மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சி.வி.காயத்ரி உள்ளிட்ட சில மாணவ, மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களில், 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, கடந்த சில ஆண்டுகளாக செய்துவருவதுபோல மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றி மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மாதம் 1-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, முந்தைய ஆண்டுகளில் தனித்தனி மனுக்களின் மீது கூடுதலாக இடம் ஒதுக்கி அனுமதி வழங்கியிருந்தாலும் இப்போது அதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது.
69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தனி கோரிக்கை எதுவும் விடுக்கப்படாததால் உங்கள் மனுவை தள்ளுபடி செய்கிறோம். 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக மனுக்களை மீண்டும் தனியாக தாக்கல் செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் மாணவிகள் வி.சஞ்ஜனா, அகிலா அன்னபூரணா ஆகியோர் தரப்பில் இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தனர். மேலும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மூல மனுவின் மீது இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், இந்த மூல மனுவை நவம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.