

புதுடெல்லி,
கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி அரசை வீழ்த்தி பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷி சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் படுதோல்வி அடைந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது என்பது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், டெல்லி அரசியலில் புயலை கிளப்பும் விதமாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேர் ஒரே நேரத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தனர். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகிய 3 பேரும் பா.ஜ.கவில் இணைந்தது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர்களை தொடர்ந்து கடந்த 18 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பயணித்த சுவாதி மாலிவால், தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேர்மையான அரசியலை முன்னிறுத்தித் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, ஊழலின் கூடாரமாக மாறிவிட்டது.
ஊழலை ஒழிக்க வந்த கட்சி இன்று ஊழலில் மூழ்கிவிட்டதாகவும், தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களும் ஆம் ஆத்மி கட்சியை விட்டு தாம் விலக முக்கிய காரணம் என அதில் தெரிவித்துள்ளார்.