

ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களுக்கு தகவல் கொடுக்கும் நபர்களை கடத்திச் சென்று கொலை செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். மேலும் மாநில அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் பாஸ்டர் மாவட்டம் திரியா கிராமத்தின் அருகே உள்ள காட்டுக்குள் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாநில நக்சலைட்டு ஒழிப்பு படை அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசாரும், மாவட்ட ரிசர்வ் போலீசாரும் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் 3 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.