வயநாட்டில் 7 மாணவர்களுக்கு ஷிகெல்லா நோய் பாதிப்பு

ஷிகெல்லா நோய் தொற்றினால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வயநாட்டில் 7 மாணவர்களுக்கு ஷிகெல்லா நோய் பாதிப்பு
Published on

வயநாடு

கேரளம் மாநிலத்தில் ஷிகெல்லா நோய் பரவி வருகிறது. இது ஷிகெல்லா என்ற பாக்டீரியாவால் குடலில் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் அசுத்தமான உணவு, தண்ணீர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பு மூலம் வேகமாக பரவுகிறது. இந்த நோய் பாதித்தவர்களுக்கு காய்ச்சல், வயிறு வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படும்.

ஷிகெல்லா நோய்

கேரளம் மாநிலத்தில் ஷிகெல்லா நோய் பரவி வருகிறது. சமீபத்தில் கோழிக்கோட்டில் சிறுமி இந்த நோய் பாதித்து உயிரிழந்தாள். இதற்கிடையே கடந்த 10-ந் தேதி வயநாடு மாவட்டம் கோளியாடி பகுதியில் உள்ள பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வாந்தி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சந்தேகத்தின் பேரில் 25 பேரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவில் 5 மாணவர்களுக்கு ஷிகெல்லா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நோய் தடுப்பு நடவடிக்கை

இந்த நிலையில் தற்போது வயநாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு ஷிகெல்லா நோய்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் தொற்றினால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரீத்தா தலைமையிலான குழுவினர் கோளியாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com