சிவில் சர்வீஸ் தேர்வில் 761 பேர் வெற்றி; மும்பை சுபம்குமார் முதலிடம்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான 2020-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் 761 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மும்பை ஐ.ஐ.டி. என்ஜினீயரிங் பட்டதாரி சுபம்குமார் முதலிடம் பிடித்துள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் 761 பேர் வெற்றி; மும்பை சுபம்குமார் முதலிடம்
Published on

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர்பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது. இது முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று 3 கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

2020-ம் ஆண்டு தேர்வு

2020-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி நடைபெற்றது. பல்வேறு குடிமைப் பணிகளில் 836 பதவிகளை நிரப்புவதற்கான இத்தேர்வை நாடு முழுவதும் 4 லட்சத்து 82 ஆயிரத்து 770 பேர் எழுதினர். அவர்களில் 2,053 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.இந்நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவை யு.பி.எஸ்.சி. நேற்று அறிவித்தது. அதன்படி, மொத்தம் 761 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 545 ஆண்களும், 216 பெண்களும் பல்வேறு சிவில் சர்வீஸ்களுக்கு யு.பி.எஸ்.சி.யால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மும்பை என்ஜினீயர் முதலிடம்

மும்பை ஐ.ஐ.டி.யில் இளநிலை சிவில் என்ஜினீயரிங் பட்டம் பெற்ற சுபம்குமார், நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளார். அவர் மானுடவியலை தனது விருப்பப் பாடமாக தேர்வு செய்திருந்தார்.பெண்களில், ஜாக்ரதி அஸ்வதி முதலிடத்தை பிடித்துள்ளார். மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பி.டெக். எலட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டம் பெற்ற இவர், சமூகவியலை தனது விருப்பப் பாடமாக தேர்வு செய்திருந்தார்.

25 பேர் மாற்றுத்திறனாளிகள்

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 761 பேரில் 25 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். தேர்வானவர்களில் 263 பேர் பொதுப் பிரிவையும், 86 பேர் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவையும், 220 பேர் ஓ.பி.சி.யையும், 122 பேர் எஸ்.சி, 61 பேர் எஸ்.டி. பிரிவையும் சேர்ந்தவர்கள்.முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் 13 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள்.

ரிசர்வ் பட்டியல்

மொத்தம் 150 பேர் ரிசர்வ் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் யு.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். முடிவு வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் மதிப்பெண்களை இணைதளத்தின் மூலமே அறிந்துகொள்ளலாம் என்று யு.பி.எஸ்.சி. செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com