தெலுங்கானாவில் வெளுத்து வாங்கும் கனமழை: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 8 பேர் பலி

தெலுங்கானாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அங்கு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 8 பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானாவில் வெளுத்து வாங்கும் கனமழை: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 8 பேர் பலி
Published on

ஐதராபாத், 

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. தொடர் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்து ஓடுகிறது. இதனால் ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து கரை புரண்டோடுகிறது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது கொட்டிய மழையால் அங்குள்ள ஒரு கிராமம் வெள்ளக்காடானது.

இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த 12 பேர் பாதுகாப்பான இடம் தேடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

அந்த 12 பேரில் 4 பேர் மட்டும் தாமாக போராடி வெள்ளத்தில் இருந்து தப்பித்தனர். மற்ற 8 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com