இமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக 9 பேர் பலி : மாயமானவர்களை மீட்கும் பணி தீவிரம்

இமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அங்குள்ள ஆறுகள், ஏரிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

சிம்லா,

இமாசல பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லா உள்பட பல மாவட்டங்களில் கடந்த 31-ந் தேதி நள்ளிரவு அதி கனமழை கொட்டியது. கனமழை வெள்ளத்தை தொடர்ந்து மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த கனமழைக்கு அங்கு 9 பேர் பலியான நிலையில், சுமார் 45 பேர் மாயமாகினர்.

அவர்களை தேடும் பணி 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. தேசிய பேரிடர் மீட்பு படை, இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட பல்வேறு படைகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே மாநிலத்தில் 7-ந் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீண்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதையொட்டி மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 190 சாலைகள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர நிலச்சரிவு அபாயம் உள்ள 82 வழித்தடங்களில் பஸ் சேவைகளை அரசு நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. தலைநகர் ராஞ்சி உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் வீடுகள், சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com