பெங்களூருவில் கனமழை: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 9 மாத குழந்தை சாவு

பெங்களூரு அருகே கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்தது. அரசு சார்பில் குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் கனமழை: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 9 மாத குழந்தை சாவு
Published on

பெங்களூரு:

9 மாத குழந்தை சாவு

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா நீருகொண்டபாளையா பகுதியைச சேர்ந்தவர் ஜனார்த்தன். இவரது மனைவி ஸ்வேதா. இந்த தம்பதிக்கு 9 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஸ்வேதா தனது குழந்தையை மடியில் போட்டு தூங்க வைத்து கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் திடீரென வீட்டின் மேற்கூரையின் சிறிய பகுதி இடிந்து ஸ்வேதாவின் மடியில் இருந்த குழந்தை மீது விழுந்தது. இதில் குழந்தை பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது.

ரூ.5 லட்சம் நிவாரணம்

நேற்று முன்தினம் பெய்த மழையின்போது சூறைக்காற்று வீசியதால் பக்கத்து வீட்டின் மாடியில் வைக்கப்பட்டிருந்த சிமெண்டு கற்கள் கவிழ்ந்து ஸ்வேதா வீட்டின் மேற்கூரையில் விழுந்ததால், மேற்கூரை உடைந்து அதன் வழியாக சிமெண்டு கல் குழந்தையின் மீது விழுந்தது தெரியவந்தது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

குழந்தை பலியானது பற்றி அறிந்ததும் குடும்பத்தினரை நேற்று நாராயணசாமி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணத்தை குழந்தையின் பெற்றோரிடம் அவர் வழங்கினார். இதுகுறித்து தேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்னர்.

பெங்களூரு நகரில் நேற்று இரவும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com