

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 7 மாதங்களுக்கு பிறகு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,76,838 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,53,587 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,901 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,03,45,985 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு தற்போது 1,77,266 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் இந்தியா முழுவதும் இதுவரை 20,23,809 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 19 கோடியே 30 லட்சத்து 62 ஆயிரத்து 694 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று 7,25,577 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.