

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள தியோலி கிராமத்தை சேர்ந்தவர் பாபுலால் மாலி (வயது 70). கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் நெருங்கி பழகினார். பின்னர் வெள்ளரிக்காய் தருவதாகக் கூறி அருகில் இருந்த விவசாய பம்பு செட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருந்த அறையில் அவரும், அவருடைய நண்பர் மொகித் மாலி (40) என்பவரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும் மற்றும் போக்சோசட்டத்திலும் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோட்டா மாவட்ட 2-வது போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் பாபுலால் மாலி, மொகித் மாலி ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தண்டனையை இருவரும் சாகும் வரை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி நரேந்தர குமார் தீர்ப்பு அளித்தார். மேலும் இருவருக்கும் தலா ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.