

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் சிர்சியில் வசித்து வந்த பெண் ஷிபாகான். இவரும் அதே பகுதியில் வசித்து வந்த எம்.பி.பி.எஸ். மாணவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மேலும் இவர்கள் 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில் இவர்களது காதல் குறித்து பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவர்கள் இருவரின் காதலையும் எதிர்த்துள்ளனர். மேலும் ஷிபாவிடம் காதலை கைவிடும்படி கண்டித்து உள்ளனர். ஆனால் குடும்பத்தினர் கூறிய எதையும் காதில் வாங்காத ஷிபா, மாணவருடனான காதலை தொடர்ந்துள்ளார்.
இருப்பினும் ஷிபாவின் குடும்பத்தினர், வேறொருவரை வரன் பார்த்து விரைவாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் நேற்று ஷிபாவுக்கும், குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கும் திருமணம் நடைபெற இருந்தது. தாலிக்கட்டும் நேரம் நெருங்கி வந்தது. அப்போது ஷிபா தனது அறையில் இருந்து வெளியேறி, தப் பித்து காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
திருமண நேரம் நெருங்கிய நிலையில் மணப்பெண்ணை அழைக்க சென்றபோது, ஷிபா அறையில் இல்லை. அப்போது தான் ஷிபா தனது காதலனுடன் தாலிகட்டும் நேரத்தில் ஓடியது தெரியவந்தது. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் மணமகன், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். மேலும் திருமணத்துக்கு வந்த இருவீட்டாரின் உறவினர்களும் கவலை அடைந்தனர்.
இதையடுத்து ஷிபாவின் பெற்றோர் உடனடியாக தனது மகளை காதலன் கடத்தி சென்றுவிட்டதாக நியூ மார்க்கெட் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஷிபா, அவரது காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தாலி கட்டும் நேரத்தில் காதலனுடன் இளம்பெண் ஓடியதால் திருமணம் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.