மராட்டியத்தில் எச்சில் துப்பினால்-ரூ.500, முக கவசம் அணியாவிட்டால்-ரூ.1,000 அபராதம்

மராட்டியத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மராட்டியத்தில் எச்சில் துப்பினால்-ரூ.500, முக கவசம் அணியாவிட்டால்-ரூ.1,000 அபராதம்
Published on

புனே,

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் பரவலாக அதிகரிக்க தொடங்கிய பின்னர் நாட்டில் அதிகம் பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களின் வரிசையில் முதல் இடத்தில் மராட்டியம் இடம் பெற்றது. மராட்டியத்தின் மும்பை, நாக்பூர், புனே உள்ளிட்ட நகரங்கள் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டன.

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து சரிவை நோக்கி சென்ற தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உச்சம் பெற்று வருகிறது. இவற்றில், மராட்டியத்தில் மீண்டும் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. மராட்டியத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25.64 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து உள்ளது.

இதனால் தடுப்பூசி போடும் பணிகள் உள்பட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 15ந்தேதி முதல் 21ந்தேதி வரை ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு அமலானது. இவை தவிர அமராவதி, யவத்மல் மற்றும் லத்தூர் போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் முன்பே விதிக்கப்பட்டு விட்டன.

தொற்று அதிகரிப்பினை முன்னிட்டு மராட்டியத்தில் திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை கொரோனா தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதேபோன்று பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வருகிற 29ந்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மராட்டியத்தின் நாக்பூர் நகரில் அதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

மராட்டியத்தில் தொற்று அதிகரிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதன்படி, பொது இடங்களில் முக கவசம் அணியாமல் காணப்படும் எந்த நபருக்கும் ரூ.500 அபராதம் விதிக்கலாம். பொது இடங்களில் யாரேனும் எச்சில் துப்புவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பீச் மற்றும் பூந்தோட்டங்கள் உள்ளிட்ட பொது இடங்களை இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். இதனை மீறுபவர்கள் தலா ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com