

புனே
மராட்டியத்தில் 3 பேர் கொண்ட கும்பல், பசுவை காரில் கடத்தி சென்ற வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மராட்டியத்தின் புனே மாவட்டத்தில் பிம்ப்ரி காவன் கிராமத்தில் உள்ள வைபவ் நகரில் நேற்று அதிகாலை 1.45 மணியளவில் பசுக்கள், கன்றுகளுடன் ஒன்றாக சாலையோரம் அமர்ந்திருந்தன.
அப்போது, அந்த வழியே மர்ம நபர்கள் காரில் வந்து இறங்கினர். அவர்கள், அந்த பசுக்களில் ஒன்றை பார்த்து நெருங்கி சென்று, அதன் கழுத்தில் கயிறை கட்டி தரதரவென்று, இழுத்து சென்று காரில் ஏற்றினர். கர்ப்பிணியாக இருந்த அந்த பசுவை காரின் பின்பக்கத்தில் ஏற்றி கதவை சாத்தினர்.
இதனால், சுற்றியிருந்த பசுக்களும், கன்றுகளும் மிரண்டபடி இருந்தன. அவை காரின் கதவை நோக்கி சென்று கத்தியபடி இருந்தன. ரூ.20 ஆயிரம் மதிப்பு கொண்ட அந்த பசுவை கடத்தி செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் எதற்காக இதனை கடத்தினர் என்று தெரிய வரவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, போலீசார் இரவு நேரத்தில் ரோந்து செல்ல வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.