ஹிஜாப் அணிந்த பெண் ஒருநாள் இந்திய பிரதமராக வருவார்: ஓவைசி

ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார் என மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் அணிந்த பெண் ஒருநாள் இந்திய பிரதமராக வருவார்: ஓவைசி
Published on

ஐதராபாத்,

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர். பதிலுக்கு இந்து மாணவர்களும் காவி துண்டு போட்டு வந்தனர்.

இதனால் மத ரீதியிலான மோதல் போக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இது கர்நாடகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து உயர்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. ஹிஜாப் அணிந்து வந்த மானவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானது.

இந்த நிலையில், ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார் என மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரமாக 43 நொடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை ஒவைசி வெளியிட்டார். அதில், ஓவைசி கூறியிருப்பதாவது:

ஒரு பெண் ஹிஜாப் அணிய முடிவு செய்து தங்கள் பெற்றோரின் ஒப்புதலை பெற்றுவிட்டால், அப்பெண் ஹிஜாப் அணிவதை யார் தடை செய்ய முடியும்

ஹிஜாப் அணிந்த பெண்கள் கல்லூரிக்கு செல்வார்கள். மாவட்ட கலெக்டர்களாக, நீதிபதிகளாக, டாக்டர்களாக, தொழிலதிபர்களாக வருவார்கள். அதனை பார்க்க நான் உயிருடன் இல்லாமல் போகலாம். ஆனால், என் வார்த்தைகளை குறித்துவைத்து கொள்ளுங்கள். ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராவார் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com