நியாமதி தாலுகாவில் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

நியாமதி தாலுகாவில் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நியாமதி தாலுகாவில் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
Published on

தாவணகெரே-

நியாமதி தாலுகாவில் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறுத்தை அட்டகாசம்

தாவணகெரே மாவட்டம் நியாமதி தாலுகா மாதவரபுரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து, கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அதாவது அந்த சிறுத்தை ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது.

மேலும் அந்தப்பகுதியில் சிறுத்தை நடமாடி வந்ததை பலர் பார்த்து உள்ளனர். இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்தனர். மேலும் வீட்டிற்குள்ளேயே அவர்கள் முடங்கி உள்ளனர். இந்தநிலையில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராமமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இரும்பு கூண்டு வைத்தனர்

இந்த நிலையில் கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 5 நாட்களுக்கு முன்பு கிராமத்தின் எல்லைப்பகுதியில் வனத்துறையினர் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். மேலும் அந்த கூண்டில் இரையாக ஆடு ஒன்றையும் கட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை இரைதேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை இரும்பு கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.

இதுபற்றி அறிந்ததும் அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்போல் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர், கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.

கிராமமக்கள் மகிழ்ச்சி

அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கி உள்ளதால், கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி சேத்தன் கூறுகையில், பிடிபட்டது 4 வயது நிரம்பிய ஆண் சிறுத்தை ஆகும்.

இந்த சிறுத்தையை சிவமொக்கா மாவட்டம் தாவரேகொப்பாவில் உள்ள உயிரியல் பூங்காவில் விடப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com