

மும்பை,
மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி சர்வதேச இந்தி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 6 பேர் சமூக பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இதனால் 6 மாணவர்களையும் கடந்த 9-ந்தேதி அந்த பல்கலைக்கழகம் அதிரடியாக நீக்கியது. மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் நிலையில், அதை மீறிய காரணத்துக்காக மாணவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழகம் தெரிவித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் மாணவர்களை நீக்கிய பல்கலைக்கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில், 6 மாணவர்கள் நீக்கத்தையும் பல்கலைக் கழகம் திடீரென ரத்து செய்து உள்ளது.