

கோழிக்கோடு,
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் இறங்கிபாலம் பகுதியில் பிரபாவதி அம்மா என்ற 73 வயது மூதாட்டி ஒருவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு செல்வதற்காக நடைபாதையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது, ஸ்கூட்டர் ஓட்டி வந்த நபர் ஒருவர் இந்த நடைபாதை வழியே வந்துள்ளார். அப்படி விதிமீறி வந்ததுடன் இல்லாமல், இவரை பார்த்து வழியை விட்டு செல்லுங்கள் என கூறியுள்ளார்.
அதற்கு பிரபாவதி, நான் எங்கே நடந்து செல்வது? சாலையில் நடந்து செல்லவா? என கேட்டு விட்டு, நடைபாதை என்பது பாதசாரிகள் நடந்து செல்வதற்கான பகுதி. சாலை என்பது 2 சக்கர வாகனங்கள் செல்ல கூடிய பகுதி என கூறியுள்ளார்.
அதற்கு அந்த நபர், என்ன சட்ட பாடம் எடுக்கின்றீர்களா? என கோபத்துடன் கேட்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவியது. அந்த மூதாட்டிக்கு ஆதரவாக விமர்சனங்கள் குவிந்தன.
இந்த தகவல் பற்றி அறிந்ததும், கேரள மோட்டார் வாகன துறையினர் பிரபாவதியின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். விதிமீறும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வயது ஒரு தடையில்லை என அந்த மூதாட்டி நிரூபித்து இருக்கிறார். விதிமீறலில் ஈடுபட்டதற்காக அந்த நபரின் வாகன ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளது.