

கொச்சி,
கேரளாவின் கோட்டயம் நகரில் பல்லம் என்ற இடத்தில் கடந்த 5-ந்தேதி சாலை விபத்து ஏற்பட்டது. இதில் ஆலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாத குழந்தை சிக்கி படுகாயமடைந்தது. மூளை சாவு அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் அதன் ஆறு உறுப்புகளை நன்கொடையாக கொடுக்க முன் வந்தனர்.
இதனால், 5 பேருக்கு அந்த உறுப்புகள் சென்று சேர்ந்தன. இதுபற்றி கேரளாவிலுள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், இளம் வயதில் கேரளாவின் உறுப்பு நன்கொடையாளராக உருவாகி உள்ள அந்த குழந்தையின் நிலைமைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், குழந்தையின் பெற்றோருடைய பெருந்தன்மையான செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
இதேபோன்று, கவர்னர் ஆர்.வி. அர்லேகர், எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து கொண்டதுடன், பெற்றோரின் முடிவையும் பாராட்டினர். அந்த குழந்தையின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ள சூழலில், அரசு மரியாதையுடன் இறுதி சடங்கை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.