மராட்டியத்தில் நடந்த தற்கொலை வழக்கில் திருப்பம்... ஒரே குடும்பத்தில் 9 பேரும் விஷம் வைத்து கொல்லப்பட்டது அம்பலம்

மராட்டியத்தில் நடந்த தற்கொலை வழக்கில் திருப்பமாக, ஒரே குடும்பத்தில் 9 பேரும் மந்திரவாதி உள்பட 2 பேரால் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
மராட்டியத்தில் நடந்த தற்கொலை வழக்கில் திருப்பம்... ஒரே குடும்பத்தில் 9 பேரும் விஷம் வைத்து கொல்லப்பட்டது அம்பலம்
Published on

புனே,

மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மாய்சல் கிராமத்தை சேர்ந்தவர் கால்நடை டாக்டர் மாணிக் எல்லப்பா (வயது 49). இவரது சகோதரர் ஆசிரியர் போபட் எல்லப்பா (54). சமீபத்தில் இவர்கள் மற்றும் இவர்களது 74 வயது தாய், மனைவிகள், 4 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் 2 வீடுகளில் இருந்து இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் மராட்டியம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல் கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக இந்த குடும்பத்தினர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கடன் தொல்லை கொடுத்ததாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 13 பேரை கைது செய்து இருந்தனர்.

இந்த நிலையில் தீவிர விசாரணையில் அதிரடி திருப்பமாக குடும்பத்தினர் 9 பேரும் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி போலீசார், மந்திரவாதியான தீரஜ் சந்திரகாந்த் (39) மற்றும் அவரது டிரைவர் அப்பாஸ் முகமது அலி பகவான் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

முக்கிய குற்றவாளியான அப்பாஸ் முகமது அலி பக்வான் என்பவர், இறந்த குடும்பத்தினரிடம் இருந்து "மறைக்கப்பட்ட புதையல்" ஒன்றைக் கண்டுபிடிப்பதாகக் கூறி அவர்களிடமிருந்து 1 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால் அவர்கள் கூறிய படி, புதையலை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பணத்தை அந்த குடும்பத்தினர் திரும்ப கேட்டதால், அவர்களை கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மாந்திரவாதியும், அவரது கூட்டாளியும் வான்மோர்களின் வீடுகளை (குறிப்பாக ஜூன் 19 அன்று) அடைந்து, மறைந்திருக்கும் புதையலைக் கண்டுபிடிக்க சில சடங்குகளைச் செய்வதாகக் கூறி, அவர்கள் குடும்ப உறுப்பினர்களை மொட்டை மாடிக்கு வரவழைத்துள்ளனர்.

அவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து, விஷம் கலந்த தேநீரை உட்கொள்ளச் சொன்னார்" என்று ஜூன் 19-20 நிகழ்வுகளின் வரிசையை விளக்கி அதிகாரி ஒருவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com