

பெங்களூரு,
கணவனை விட அதிகம் சம்பளம் வாங்கும் பெண்களுக்கு ஜீவனாம்சம் கிடையாது என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர்கள் ஜீவன் மற்றும் சஹானா தேவி. இருவருக்கும் கடந்த 2024- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்தனர். இதையடுத்து மனைவி சஹானா தேவி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் அவரது மனைவிக்கு மாதந்தோறும் ரூ. 20,000 இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஜீவன், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர். சில்லக்கூர் சுமலதா, இருவரின் வருமானத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தார்.
கணவரின் மாத வருமானம் ரூ. 60,646 ஆகவும், மனைவியின் மாத வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு அதிகமாகவும் இருந்தது. மனைவிக்கு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு உள்ளிட்ட பிற பெரிய நிதிச் சுமைகளும் இல்லை.
எனவே, பொருளாதார ரீதியாகத் தன்னைத் தானே நிர்வகித்துக் கொள்ளும் திறன் படைத்த பெண், தன்னை விடக் குறைவான வருமானம் ஈட்டும் கணவனை ஜீவனாம்சம் தருமாறு கட்டாயப்படுத்துவது நியாயமற்றது என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ரூ. 20,000 ஜீவனாம்சம் வழங்கும் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஜீவனாம்சம் என்பது பாலின அடிப்படையில் வழங்கப்படக் கூடாது என்றும், அது பிரிந்து வாழும் தம்பதியரில் போதிய வருமானம் இல்லாதவருக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கும் நோக்கம் கொண்டதாகும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.