சாலை தடுப்பு சுவரில் மோதி சொகுசு கார் இரண்டாக உடைந்து இளம்பெண் பலி

கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு சுவரில் மோதி 2 துண்டாக உடைந்தது.
சாலை தடுப்பு சுவரில் மோதி சொகுசு கார் இரண்டாக உடைந்து இளம்பெண் பலி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பானசவாடி பி.என்.டி. காலனியை சேர்ந்தவர் ஷாஜியா ஷேக் (வயது 28), இவரது நண்பர் ரிஸ்வான். இதில் ரிஸ்வான் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிடுவதற்காக சொகுசு கார் ஒன்றில் பெங்களூருவில் இருந்து தேவனஹள்ளிக்கு சென்றனர்.

அங்கு ஒரு ஓட்டலில் இரவு உணவை சாப்பிட்ட அவர்கள் அதிகாலையில் அங்கிருந்து புறப்பட்டு பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த னர். காரை ரிஸ்வான் ஓட்டினார். அப்போது பெங்களூரு-சென்னை விரைவுச்சாலையில் வந்தபோது ரிஸ்வானின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு சுவரில் மோதி 2 துண்டாக உடைந்தது.

இந்த கோர விபத்தில் காரின் இடிபாடுகளிடையே சிக்கி ஷாஜியா ஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பலத்த காயம் அடைந்த ரிஸ்வான், தப்பிக்க முயன்று அங்கிருந்த 20 அடி ஆழ சாக்கடை கால்வாயில் விழுந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒசக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்ட னர்.

பின்னர் போலீசார் பலியான ஷாஜியா ஷேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ரிஸ்வான் தப்பி விட்டதாக நினைத்து போலீ சார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த சாக்கடை கால்வாயில் ரிஸ்வான் பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவரது உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒசக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com