

திருவனந்தபுரம்,
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் தூங்கன்பாரா பகுதியில் வசித்து வருபவர் பசி (வயது 80). இவர் கேரள அரசு பேருந்து ஒன்றில் ஏறி நடத்துநரிடம் காரமனை பகுதிக்கு செல்வதற்காக பயண சீட்டு வாங்கியுள்ளார்.
ஆனால் பேருந்து நிறுத்தம் வந்தும் அவர் இறங்கவில்லை. இதனால் நடத்துநர் தொடர்ந்து அவரிடம் எங்கு செல்ல வேண்டும்? என கேட்டுள்ளார். இதற்கு அந்த முதியவர், அனுமன் கோயில் ஒன்று இருக்கும் பகுதியில் இறங்க வேண்டும் என திரும்ப திரும்ப கூறியுள்ளார்.
அவரது காலில் வீக்கம் இருந்தது. அவருக்கு ஞாபக மறதி வியாதியும் உள்ளது. அதனால் செல்ல வேண்டிய இடம் அல்லது தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை பற்றி அவரால் கூற முடியவில்லை.
இதுபற்றி போலீசாரிடம் நடத்துநர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களிடமும் முதியவரால் சரியான பதிலை தர முடியவில்லை. அவரிடம் சில ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன.
இந்த நிலையில், அவர் ஆதார் அட்டை வைத்திருக்கலாம் என்ற யூகத்தில் போலீசார் அருகில் இருந்த ஐ.சி.டி. சேவை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு விரல் ரேகை பதிவின் வழியே ஆய்வு செய்யப்பட்டதில் ஆதார் அட்டை வைத்திருப்பவர் என்பது தெரிந்தது.
அதன் உதவியால் முதியவரின் பெயர், முகவரி மற்றும் பிற விவரங்கள் பெறப்பட்டு, அவரை காணாமல் தவித்திருந்த குடும்பத்தினரை போலீசார் தொடர்பு கொண்டனர். அதன்பின் அரசு வாகனத்தில் முதியவரை கொண்டு சென்று குடும்பத்தினரிடம் போலீசார் சேர்த்தனர்.