ஆதார் எண் இணைக்க மார்ச்-31 ஆம் தேதி வரை அவகாசம்: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

அரசின் பல்வேறு நலத்திட்ட பயன்களை பெற ஆதார் எண் இணைக்க மார்ச்-31 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதார் எண் இணைக்க மார்ச்-31 ஆம் தேதி வரை அவகாசம்: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
Published on

புதுடெல்லி,

அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் 17-ந் தேதி முதல் விசாரிக்க உள்ளது.

இதற்கிடையே அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயம் ஆக்கி இருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு பல்வேறு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வின் முன் விசாரிக்கப்பட்டு வந்தன.

இந்த அமர்வின் முன் மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, வங்கிக்கணக்குகள் உள்ளிட்டவற்றில் ஆதார் எண் இணைப்பதற்கு டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாள் என்பதை 2018-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட இருப்பதாக தெரிவித்தார். அதன்படி நேற்றுமுன்தினம் இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.

இந்நிலையில், இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம், ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். செல்போன் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளில் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்த கூடாது என மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com