தீவிரவாதிகள் முகாம்கள் மீது விமானப்படை தாக்குதல்: இந்திய விமானப்படைக்கு குவியும் பாராட்டுகள்...!

தீவிரவாதிகள் முகாம்கள் மீது விமானப்படை தாக்குதல் தொடர்பாக இந்திய விமானப்படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #IndiaStrikesBack #IndianAirForce
தீவிரவாதிகள் முகாம்கள் மீது விமானப்படை தாக்குதல்: இந்திய விமானப்படைக்கு குவியும் பாராட்டுகள்...!
Published on

புதுடெல்லி,

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையையொட்டிய  பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய விமானப்படை இன்று வீசியுள்ளது. இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படை ஏறக்குறைய 21 நிமிடங்கள் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய விமானப்படை வீரர்களுக்கு என் வணக்கம் எனத் தெரிவித்துள்ளார். இதே போல டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய விமானப்படை விமானிகளை வணங்குகிறேன். அவர்கள் நம்மை பெருமை படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி சார்பிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய விமானப்படைக்கும் ஆயுதப்படைக்கும் என் வணக்கங்களும் பாராட்டுகளும்- அகிலேஷ் யாதவ்

நாட்டு மக்களை பாதுகாக்க விமானப்படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்- பிரகாஷ் ஜவடேகர்

தீவிரவாத முகாம்களை விமானப்படை தாக்கி அழித்ததற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

தீவிரவாத முகாம்களை விமானப்படை தாக்கி அழித்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இந்திய விமானபடைக்கு கிரிக்கெட் வீரர் சேவாக் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தீவிரவாத முகாம்களை விமானப்படை தாக்கி அழித்ததற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இதுபோல் நடிகர்கள் அபிசேக் பச்சன், அஜய் தேவ்கான், அக்ஷய் குமார்,  சேட்டன் பகத், மல்லிகா ஷெராவத் ஆகியோர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com