

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை உச்சக்கட்டமாக ஒரு நாளில் 4 லட்சத்துக்கு மேலாக பல நாட்கள் பதிவாகின. பின்னர் மெல்ல மெல்ல குறைந்து வந்தது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தளர்வில்லா ஊரடங்குகள், கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு, பொதுமக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஆகியவற்றின் நிமித்தமாக தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது.
நேற்று முன்தினம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகினர். நேற்று இந்த எண்ணிக்கை மேலும் சரிந்தது. 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 427 பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். கடைசியாக ஏப்ரல் 14-ந் தேதி தினசரி பாதிப்பு 1 லட்சத்து 84 ஆயிரத்து 372 ஆக பதிவானது. அதன்பின்னர் இப்போது 40 நாட்களுக்குப்பிறகு தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழே வந்தது
மீண்டும் 2 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 08 ஆயிரத்து 921-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 95 ஆயிரத்து 591- ஆக உள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 91 ஆயிரத்து 191 -என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 955- பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா மீட்பு விகிதம் 89.66 சதவிகிதமாக அதிகரித்துள்ள்ளது.
வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 11.45 சதவிகிதமாகவும் தினசரி பாதிப்பு விகிதம் 9.42 சதவிகிதமாகவும் உள்ளது. 2-வது நாளாக தொற்று பாதிப்பு விகிதம் 10-க்கும் கீழ் சரிந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியை தாண்டியுள்ளது.