'ஐதராபாத்தின் வளர்ச்சி குறித்த நடிகர் ரஜினிகாந்த் பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது' - அமைச்சர் ரோஜா விமர்சனம்

ரஜினிகாந்தின் பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது என ஆந்திர அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார்.
'ஐதராபாத்தின் வளர்ச்சி குறித்த நடிகர் ரஜினிகாந்த் பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது' - அமைச்சர் ரோஜா விமர்சனம்
Published on

ஐதராபாத்,

பிரபல நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது இந்த விழாவில் ஆந்திரா முன்னாள் முதல்-மந்த்ரி சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் பாலகிருஷ்ணா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 'சந்திரபாபு நாயுடுவை எனக்கு நீண்ட காலமாக தெரியும். 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. ஐதராபாத்தை ஹைடெக் நகரமாக சந்திரபாபு உருவாக்கினார். ஐ.டி. என்றால் என்ன என்று கூட தெரியாத காலத்திலேயே அவர் ஐ.டி.யை ஐதராபாத்திற்கு கொண்டு வந்தார்.

22 அண்டுகளுக்கு பிறகு நான் ஐதராபாத்தை சுற்றிப் பார்த்தேன். நான் ஐதராபாத்தில் இருக்கிறேனா அல்லது நியூயார்க்கில் இருக்கிறேனா என்று தோன்றியது. சந்திர பாபுவின் 2047 தொலைக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே ஆந்திரா முதன்மை மாநிலமாக மாறும். ஆந்திராவின் நிலை எங்கேயோ போய்விடும்" என்று கூறினார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது என ஆந்திர அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2003 ஆம் ஆண்டுடன் தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்து விட்டதாகவும், அதன்பின் இப்போது இருபது ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது ஐதராபாத் நகரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, ஐதராபாத் பகுதியை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடு அந்த நகரின் வளர்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ரோஜா குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com