ஆந்திராவில் அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு; நடிகை ரோஜாவுக்கு சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்பு

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் அமைச்சர்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர். நடிகை ரோஜாவுக்கு சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆந்திராவில் அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு; நடிகை ரோஜாவுக்கு சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்பு
Published on

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.. கடந்த மாதம் 30-ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றார். எனினும், அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

ஒரு வாரமாக அமைச்சரவையில் யார், யாருக்கு இடம் அளிக்கலாம் என்பது குறித்து முக்கிய தலைவர்களுடன் ஜெகன் ஆலோசித்து வந்தார்.

இந்நிலையில், ஜெகனின் அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

எஸ்.சி, எஸ்.டி, பி.சி, சிறுபான்மையினர் மற்றும் காப்பு சமூகம் ஆகிய சமூகத்தில் இருந்து ஒருவர் என்று 5 பேர் துணை முதல்வர்களாக இடம் பெற உள்ளனர். 5 துணை முதல்வர்கள் இன்று பதவியேற்றனர்.

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள 25 அமைச்சர்களுக்கும் ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சுழற்சி முறையில் அமைச்சரவையை மாற்றியமைக்கவும் ஜெகன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நகரி தொகுதியில் வெற்றி பெற்ற நடிகை ரோஜா அமைச்சராவார் என கூறபட்டது. ஆனால் அவர் அமைச்சராக பதவி ஏற்கவில்லை அதனால் அவருக்கு சபாநாயகராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று காலை முறைப்படி அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டு முதல்வராக பொறுப்பேற்றார்.

முன்னதாக அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெகனின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து தலைமை செயலக அதிகாரிகள், ஊழியர்கள் வரிசையில் நின்று ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com