

ஸ்ரீகாளஹஸ்தி,
நடிகை ஸ்ரீதேவியின் சித்தப்பா வேணுகோபால்ரெட்டி திருப்பதியில் வசித்து வருகிறார். அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்ரீதேவி சிறுவயது முதலே எங்கள் வீட்டில் வளர்ந்தவர். நாங்கள் வசிக்கும் இந்த வீடும் ஸ்ரீதேவியின் தாத்தா வீடு தான். திருமணம் ஆன பிறகு ஸ்ரீதேவியின் தாய் வீட்டு உறவுகளுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டது.
இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 13-ந்தேதி ஸ்ரீதேவி தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார். அப்போது அவர்கள் எங்களை சந்திப்பார்கள். பெரிய நடிகையான பிறகு பாதுகாப்பு காரணங்களால் அவர் எங்கள் வீட்டுக்கு வர மாட்டார்.
அவருக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இல்லை. எப்போதாவது சில நேரங்களில் மட்டும் மது குடிப்பதாக கேள்விப்பட்டுள்ளோம். அவர் மது குடித்ததை நாங்கள் நேரில் பார்த்ததில்லை.
அவருடைய கணவர் எடுத்த படத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் சென்னையில் இருந்த சில சொத்துக்களை அவர் விற்று விட்டார். தற்போது அவருக்கு கடன் இருந்து வந்தது. கடன் தொல்லையால் தான் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வந்தார். அவருடைய மரணத்தில் துபாய் அரசு என்ன கூறுகிறதோ அதை ஏற்கும் நிலையில் தான் நாங்கள் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.