

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் மாடல் அழகியும், நடிகையுமான 33 வயதான டிவிஷா சர்மா கடந்த 12-ந் தேதி தன்னுடைய கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் கையில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதட்சணை கொடுமையால் தான் அவர் தற்கொலை செய்தார் என்று கூறி, டிவிஷாவின் கணவர் சமர்த் சிங், மாமியாரும் முன்னாள் மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் கணவர் சமர்த் சிங் ஏற்கனவே கைதாகி சி.பி.ஐ. காவலில் உள்ளார்.
முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாமியார் கிரிபாலா சிங் நேற்றுமுன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், சமர்த் சிங்கின் காவல் முடிவடைந்ததை அடுத்து, தாயையும் மகனையும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று போபால் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சோபனா பாலாவே, கைதான முன்னாள் பெண் நீதிபதி கிரிபாலா சிங்கை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.அதேபோல், டிவிஷாவின் கணவர் வக்கீலான சமர்த் சிங்கின் காவலையும் மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து அதிரடி உத்தரவிட்டார். இதன்படி, வருகிற 2-ந் தேதி மதியம் 2 மணி வரை இருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.