நடிகை வசுந்தராதாசை மானபங்கம் செய்ய முயற்சி - தலைமறைவான டிரைவருக்கு வலைவீச்சு

கார் செல்ல வழி விடாததால் நடிகை வசுந்தராதாசுடன் தகராறு செய்து, அவரை மானபங்கம் செய்ய முயன்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
நடிகை வசுந்தராதாசை மானபங்கம் செய்ய முயற்சி - தலைமறைவான டிரைவருக்கு வலைவீச்சு
Published on

பெங்களூரு,

கார் செல்ல வழி விடாததால் நடிகை வசுந்தராதாசுடன் தகராறு செய்த டிரைவர், அவரை மானபங்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமறைவான டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கன்னட திரையுலகில் நடிகையாகவும், பாடகியாகவும் இருந்து வருபவர் வசுந்தராதாஸ். இவர், தமிழில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்தில், கதா நாயகியாக நடித்திருந்தார்.

நடிகை வசுந்தராதாஸ் பெங்களூருவில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவர் தனது காரில் ராஜாஜிநகர், பாஷியம் சர்க்கிள் சிக்னலில் நின்றார். அதே சிக்னலில் பின்னால் நின்ற டிரைவர் தனது கார் செல்வதற்கு வழிவிடும்படி ஹாரன் அடித்துள்ளார்.

ஆனால் நடிகை வசுந்தராதாஸ் காரை எடுக்கவில்லை. பின்னர் சிக்னல் விழுந்ததும் அங்கிருந்து தனது காரை அவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில், தன்னுடைய கார் செல்ல வழிவிடாததால் நடிகை வசுந்தராதாசின் காரை, டிரைவர் தனது காரில் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

மல்லேசுவரம் 18-வது கிராஸ், மார்கோஷா ரோட்டில் வசுந்தராதாசின் காரை, டிரைவர் வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் நடிகை வசுந்தராதாசுடன் அந்த டிரைவர் தகராறு செய்ததுடன், தகாத வார்த்தையில் திட்டியதாகவும், அவரை மானபங்கம் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.

உடனே அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் அங்கிருந்து காருடன் தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து நடிகை வசுந்தராதாஸ் மல்லேசுவரம் போலீசில் புகார் கொடுத்தார். மேலும் அவர் காரின் பதிவுஎண்ணையும் போலீசாரிடம் வழங்கியுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com