ஈரான்,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை கையாளப்போவதில்லை - அதானி நிறுவனம்

ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை கையாளப்போவதில்லை என்று அதானி துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈரான்,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை கையாளப்போவதில்லை - அதானி நிறுவனம்
Published on

மும்பை,

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி ஆகும். இந்த போதைப்பொருள் ஈரானில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முந்த்ரா துறைமுகம் தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துறைமுகத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை கையாளப்போவதில்லை என்று அதானி துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 15-ம் தேதி முதல் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை அதானி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் கையாளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com