

நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களை மக்கள் எளிதில் கண்டறிந்து அதன் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கூகுள் வரைபடத்தில் அவற்றை இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த முன்முயற்சி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு ஆதார் சேவைகளை எளிதில் பெற வழிவகுக்கும். ஆதாரில் மூத்த குடி மக்கள் மற்றும் குழந்தைகளின் பெயர்களை சேர்ப்பது, முகவரி, செல்போன் எண் போன்ற விவரங்களை புதுப்பிப்பது என பல்வேறு சேவைகளை எளிதில் மேற்கொள்ளும் வகையில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வரைபட தகவலில் வாகனம் நிறுத்துவதற்கான வசதிகள், ஆதார் மையங்கள் செயல்படும் நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய மின்னணுவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.