புகையிலை பழக்கத்துக்கு அடிமை... கண்டித்த பெற்றோர்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

இளம்பெண் புகையிலை போடும் பழக்கத்துக்கு அடிமையானார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் கர்ஜகி கிராமத்தை சேர்ந்தவர் பீபிஜா சோண்டி(வயது 18). இவர் அதே பகுதியில் வீடு ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் பீபிஜா புகையிலை போடும் பழக்கத்துக்கு அடிமையானார். இதை அறிந்த பெற்றோர் பீபிஜாவை கண்டித்தனர். ஆனால் அவா் கேட்கவில்லை. தொடர்ந்து புகையிலையை பயன்படுத்தி வந்தார். இதனால் கோபம் அடைந்த பெற்றோர் நேற்று முன்தினம் பீபிஜாவை திட்டியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த பீபிஜா சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து ஹாவேரி புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் பீபிஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹாவேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெற்றோர் புகையிலை பழக்கத்தை கண்டித்ததால் தூக்குப்போட்டு பீபிஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.