

புதுடெல்லி,
இந்திய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பு வகித்த ஆர்.ஹரி குமார் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், கடற்படை செயல்பாட்டு தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகித்த தினேஷ் குமார் திரிபாதி கடற்படைத் தளபதியாக கடந்த 19-ம் தேதி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் 26-வது கடற்படைத் தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐஎன்எஸ் கிர்ச், ஐஎன்எஸ் கவச் ஆகிய போர்க் கப்பல்களை தலைமையேற்று திறம்பட வழிநடத்தியவர் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி.இதனிடையே, கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்கும் முன், அவர் தனது தாயாரின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றது காண்போரை நெகிழச் செய்தது.
1964-ம் ஆண்டு மே 15-ல் பிறந்த வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி 1985 ஜூலை 01 அன்று இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் நியமிக்கப்பட்டார். தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் நிபுணரான இவர், கிட்டத்தட்ட 39 ஆண்டுகளாக இதில் பணியாற்றியுள்ளார். கடற்படை ஊழியர்களின் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் மேற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீப் ஆக பணியாற்றி உள்ளார். மேற்கு கடற்படையின் செயல்பாட்டு அதிகாரி, கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநர், முதன்மை இயக்குநர் உட்பட பல்வேறு முக்கியமான செயல்பாட்டு மற்றும் பணியாளர் நியமனப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.