தவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பகிரங்க மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்

விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பகிரங்க மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்
Published on

புதுடெல்லி,

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

கடந்த மாதம் 'பதஞ்சலி' நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு, பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நோட்டீசுக்கு பதிலளிக்காததால், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

வழக்கு தொடர்பாக ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் யோகா குரு ராம்தேவ் கடந்த 2-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது, பிரமாண பத்திரம் திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தியை தெரிவித்தனர்.

ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளனர். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், நீங்கள் செய்திருப்பது மிக தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு செயல், மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் காட்டத்துடன் தெரிவித்தனர். அத்துடன், புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 16-ம் தேதிக்கு (அதாவது இன்று) தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க வேண்டும் என்று பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தனர். அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள் மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்?; நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com