

புதுடெல்லி
காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறுமாறும் , பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டுக் குடிமக்களை கேட்டுக் கொண்டு உள்ளன.
ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.
இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.
இதற்கிடையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறது. கடைசியாக ஞாயிற்றுக்கிழமை 160க்கும் மேற்பட்ட இந்தியர்களை விமானப்படை விமானம் மூலம் மத்திய அரசு மீட்டது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது, அங்குள்ள இந்தியர்கள் நிலை ஆகியவை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அப்னா தளம் கட்சி சார்பில் அனுப் பிரியா, தேவேகவுடா, உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய அ ரசு சார்பில் மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரஹலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க அனைத்துப் நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதற்குதான் அதிகபட்ச முன்னுரிமை வழங்கப்படும்.
தற்போது சூழல் மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. தோஹா ஒப்பந்தத்தை மீறியும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியும் தலீபான்கள் செயல்படுகிறார்கள். தோஹா ஒப்பந்தம் என்பது தலீபான்களுக்கும், அமெரிக்கப் படைகளுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. இதன்படி மத, ஜனநாயக சுதந்திரம் வழங்குவதும், காபூலில் அனைத்து சமூகத்தின் பிரிவுகளின் பிரதிநிதிகள் அடங்கிய அரசை நிறுவும் வகையிலான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டனர்
இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த 175 பேர், 263 இந்தியர்கள், ஆப்கன் நாட்டைச் சேர்ந்த 112 பேர், 3-ம் நாட்டைச் சேர்ந்த 15 பேர் என 565 பேர் இதுவரை பேர் இந்தியப் படையால் மீட்கப்பட்டுள்ளனர் என கூறினார்.
கூட்டத்திற்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்கள் அனைவரையும் முழுமையாக விரைவில் வெளியேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. இது தொடர்பாக ஏதாவது சர்வதேச அளவில் முடிவுகள் ஏதும் எடுக்கப்பட்டால், அதில் இந்தியாவின் பங்கு அங்கீகரிக்கப்படும்.
அடுத்துவரும் நாட்களில் இதுபோன்று பல கூட்டங்கள் நடத்தப்பட்டு நிலவரம் தெரிவிக்கப்படும். பெரும்பாலான இந்தியர்களை அழைத்து வந்து விட்டோம், சிலருக்கு விமானம் கிடைக்கவில்லை. ஒவ்வொருவரையும் தாயகத்துக்கு பாதுகாப்பாக அழைத்துவர முயற்சிப்போம். ஆப்கானிஸ்தான் மக்கள் சிலரையும் மீட்டுள்ளோம். இதுதொடர்பாக அனைத்து தகவல்களையும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் விரிவாகத் தெரிவிக்கப்பட்டது' என கூறினார்.