

புதுடெல்லி,
பிரதமர் மோடி நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் உரையாற்றினார்.
பிரதமர் மோடி பேசுகையில், விவசாயத்திற்கான பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயரும் என குறிப்பிட்டார்.
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு விவசாய பட்ஜெட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது. விவசாயத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை கடந்த 4 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி ரூ.2.12 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் இது அதிகமாகும். 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயர்த்தப்படும் என்பது உறுதி.
வேளாண்மையில் இருந்து விசாயிகளுக்கு கிடைக்கும் வருவாயை உயர்த்துவது, விவசாயத்தில் உள்ளீட்டுச் செலவை குறைப்பது, விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுத்தல், விளைபொருட்கள் வீணாவதைத் தடுத்து, அதைப் பாதுகாத்து மாற்று வருமானத்துக்கு உதவி செய்தல் என்ற இலக்குடன் செயல்படுகிறது என்று பிரதமர் மோடி பேசினார். அவர் மேலும் பேசுகையில்,
2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயர்த்த நாங்கள் முடிவு செய்தோம். நாங்கள் விவசாயிகள் வருமானம் இருமடங்காக்கப்படும் என்று பேசியபோது, பலர் நகைத்தார்கள், இது முடியாது எனவும், கடினமானது எனவும் கூறினார்கள். அவர்கள் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால் விவசாயிகள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டதால் நாங்கள் இம்முடிவை எடுத்தோம் எனவும் பேசினார்.