

புதுடெல்லி,
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி 5ம் தேதியிலிருந்து அவர் விசாரணைக் காவலில் எடுக்கப்பட்டார். இவர் அமலாக்கத்துறை வழக்கு தொடர்பாகவும், சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு தொடர்பாகவும் விசாரணைக் காவலில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இந்நிலையில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். ஜாமீன் அளிப்பதற்கான போதிய அடிப்படைகள் இல்லை என்று மனுவை தள்ளுபடி செய்வதாக அவர் தன் உத்தரவில் தெரிவித்தார்.