ஆமதாபாத் விபத்து: ஏர் இந்தியா கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு

விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஆமதாபாத் விபத்து: ஏர் இந்தியா கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந் தேதி, புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விபத்து பகுதியில் இருந்த 29 பேரும் பலியானார்கள்.அவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த விமானத்தின் கருப்பு பெட்டியின் ஒரு பகுதி, அதாவது விமானம் பறக்கும் இடம், வேகம், என்ஜின் செயல்பாடு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் எப்.டி.ஆர். கருவி 13-ந்தேதியே மீட்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கருப்பு பெட்டியின் மற்றொரு பகுதியான சி.வி.ஆர். அதாவது விமானி அறையின் குரல் பதிவுகள் அடங்கிய கருவியை மீட்புக்குழுவினர் தேடி வந்தனர். அந்த கருவியும் கடந்த இரு தினங்களுக்கு முன் மீட்கப்பட்டது. கருப்பு பெட்டியின் முழு பகுதியும் கிடைத்திருப்பதால் விபத்துகான காரணங்களை முழுமையாக கண்டறிய முடியும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787 விமானத்தின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெட்டிக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்ட சேதத்தால், டிஜிட்டல் ரெகார்டிங் தரவை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என இந்திய நிபுணர்கள் தெரிவித்ததால், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரவுகளை பெற அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டி முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே விமான விபத்துக்கான காரணம் தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com