

புதுடெல்லி,
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகிறது. கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தவும் உயிரிழப்பைத் தடுக்கவும் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை 2 முதல் 18 வயது உள்ள குழந்தைகளிடம் பரிசோதனை செய்ய எஸ்இசி ( Subject expert committe) என்ற குழு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்குக் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை நன்றாகப் பரிசீலித்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு. கோவாக்சின் தடுப்பூசிகளைக் குழந்தைகளிடம் பரிசோதனை செய்யக் கடந்த மே 13ஆம் தேதி அனுமதி வழங்கியது.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளிடம் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கான மருத்துவப் பரிசோதனை இன்று தொடங்கியது.
கொரோனாவின் முதல் அலை முதியவர்களையும், இரண்டாவது அலை இளைஞர்களையும் பாதித்தது. தற்போது இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தாவிட்டால் மூன்றாவது அலை குழந்தைகளைப் பாதிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் பையோடெக்- பைசர் ( Pfizer-BioNTech) தடுப்பூசிகளை குறிப்பிட்ட சில வயது குழந்தைகளிடம் பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. மேலும் கொரோனாவாக் ( CoronaVac) என்ற கொரொனா தடுப்பூசிகளை 3 முதல்17 வயது குழந்தைகளிடம் பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.