

அம்பலா,
அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானத்தளம் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக விமானம் மீது பறவை மோதியது. இதில், விமானத்தின் ஒரு என்ஜின் செயலிழந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமானி, அம்பலா விமானப்படை தளத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
இதில் அவசர நடவடிக்கையாக, விமானத்தின் பாரத்தை குறைக்கும் வகையில், விமானத்தின் எரிபொருள் டேங்க் மற்றும் சிறிய அளவிலான பயிற்சி குண்டுகளையும் கீழே வீச வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், பால்தேவ் நகரில் உள்ள விமானப்படை தளத்தின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியை விமானம் கடக்கும் போது நிகழ்ந்துள்ளது. இதில், விமானத்தின் ஒரு சில பொருட்கள் வீட்டின் மேற்கூரையின் மீதும், ஒரு சில பொருட்கள் சாலையிலும் விழுந்தது. இந்த சம்பவம் பற்றி விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், கடந்த ஜனவரி மாதம் உத்தரபிரதேசத்தில் ஜாகுவார் ரக விமானப்படை விமானம் விபத்தை சந்தித்த போது, அதில் இருந்து விமானி ரோகித் பத்திரமாக தரையிறங்கினார். இந்திய விமானப்படை சுமார் 100 ஜாகுவார் போர் விமானங்களைக் கொண்டுள்ளது.