பஹ்ரைன் நாட்டில் இருந்து 1½ கிலோ தங்கம் கடத்தி வந்த விமான நிறுவன ஊழியர் கைது

பஹ்ரைன் நாட்டில் இருந்து தங்கத்தை பசையாக மாற்றி 2 கைகளிலும் ஒட்டி கடத்தி வந்த விமான நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஹ்ரைன் நாட்டில் இருந்து 1½ கிலோ தங்கம் கடத்தி வந்த விமான நிறுவன ஊழியர் கைது
Published on

கொச்சி,

பஹ்ரைன் நாட்டில் இருந்து தங்கத்தை பசையாக மாற்றி 2 கைகளிலும் ஒட்டி கடத்தி வந்த விமான நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பஹ்ரைன் நாட்டிலிருந்து கேரள மாநிலம் கொச்சி வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். இந்த சோதனையில் யாரும் தங்கத்துடன் சிக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் விமான நிறுவன ஊழியர்களை கண்காணித்தனர். அப்போது விமானத்தின் கேபின் ஊழியர் ஒருவரின் நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவரை பின்தொடர்ந்த அதிகாரிகள் அவர் விமான நிலையத்தில் கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயல்வதை கண்டனர். அவரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அந்த ஊழியர் முழுக்கை சட்டை அணிந்து இருந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்த பின்பு அவரது உடல் முழுவதும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதற்காக அவரது சட்டையை அகற்றியபோது அந்த ஊழியரின் இரண்டு கைகளிலும் தங்க பசை ஒட்டப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த பசையை அகற்றி சோதனை செய்தனர்.

அதில் 1 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஊழியரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வயநாட்டை சேர்ந்த ஷபி என்பது தெரியவந்தது. மேலும் அவர் தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com