ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் - முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால், முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் - முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
Published on

புதுடெல்லி,

மும்பையில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்துக்கு நேற்று மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக கூறி விட்டு தொடர்பை துண்டித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இந்நிலையில் கடத்தல் மிரட்டல் எதிரொலியாக விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு, அனைத்து விமான நிலையங்களுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருக்கிறது.

அந்த உத்தரவில், விமான நிலைய முனைய கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்களை நிறுத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். வாகன நிறுத்தும் இடத்தில் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும். விமான நிலைய பிரதான நுழைவு வாயிலில் பயணிகள், பார்வையாளர்கள், ஊழியர்கள் என அனைவரையும் தீவிரமாக சோதனையிட வேண்டும். சரக்குகள், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும். விமான நிலைய பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உள்ளூர் உளவுத்துறை தகவலையும் கேட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com