

புதுடெல்லி,
எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க இந்தியா-சீனா இடையிலான சிறப்பு பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பீஜிங் செல்ல உள்ளார்.
இந்தியாவும் சீனாவும் 3488 கிலோ மீட்டர் தூரம் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. எல்லையில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க 2003ம் ஆண்டு முதல் இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தியா சார்பில் சிறப்பு பிரதிநிதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டு உள்ளார். சீனா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ சிறப்பு பிரதிநிதியாக உள்ளார்.
இந்தநிலையில்,கடந்த 2020 ம் ஆண்டு லடாக்கின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள கல்வான் எல்லைப் பகுதியில் நடந்த மோதலால் இரு நாட்டு உறவு மோசம் அடைந்தது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த சிறப்பு பிரதிநிதிகள், ராணுவ தளபதிகள் மற்றும் இந்தியா - சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பு வாயிலாக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.
இந்நிலையில், எல்லைப் பிரச்சினை குறித்து 25வது சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. இதில், பங்கேற்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை (ஆக.,24) பீஜிங் செல்ல உள்ளார். அங்கு, அவர் வாங்யீயை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே இந்தியா, சினா, ரஷியா, பிரேசில் மட்டும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் பங்குவகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் சீனாவின் பெய்ஜிங் நகரில் வருகிற 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அஜித் தோவல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-சீனா இடையே சமீபகாலமாக நிலவிவரும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து நல்ல முடிவுகள் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.