வேலை நாட்களில் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

வேலை நாட்களில் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலை நாட்களில் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனாவின் வேகம் குறைந்து வருகிறது. தற்போது 1 லட்சத்துக்கும் குறைவான நோயாளிகளே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி விட்டது.

இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்களும் பணிக்கு வர மத்திய அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது. இதுவரை துணை செயலாளர் மற்றும் அதற்கு மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்து கொண்டிருந்த நிலையில், இனி அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட உத்தரவு ஒன்றில், அனைத்து மட்டத்திலான அரசு ஊழியர்களும், அனைத்து பணி நாட்களிலும் எந்தவித விலக்கும் இன்றி பணிக்கு வரவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. எனினும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

அதேநேரம் அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவுக்கு தொடர்ந்து தடை நீடிப்பதாகவும், அலுவலகங்களில் கூட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் சந்திப்புகள் கூடுமானவரை தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இதைப்போல அலுவலகங்களில் அனைத்து துறை கேன்டீன்களும் திறக்கவும் அனுமதி அளித்து மற்றொரு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com