

முன்னாள் பிரதமர் தேவேகவுடா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சித்தராமையா பிடிவாதம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த குலாம்நபிஆசாத், பிரதமரை புகழ்ந்து பேசியுள்ளார். அத்தகைய தலைவர்கள் ஒதுங்கிய நிலையில், காங்கிரசை பலப்படுத்த சித்தராமையா போன்ற தலைவர்கள் அக்கட்சிக்கு தேவை. கடந்த 2018-ம் ஆண்டு மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸ் கைப்பற்ற சித்தராமையா முயற்சி செய்தார்.
அப்போது ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 25 கவுன்சிலர்கள் இருந்தனர். ஆயினும் காங்கிரசுக்கு மேயர் பதவியை விட்டுக் கொடுங்கள் என்று நானே கூறினேன். அதன் பிறகு மேயர் பதவியை எங்கள் கட்சிக்கு சித்தராமையா விட்டுக் கொடுத்தார். சித்தராமையா பிடிவாதம் பிடித்தால் இந்த முறையும் மேயர் பதவியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுங்கள் என்று கூறி இருப்பேன். ஆனால் சித்தராமையா எங்கள் கட்சியை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
வெற்றி பெறவில்லை
மேயர் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற ஜனதா தளம் (எஸ்) கட்சி கவுன்சிலர்களை இழுக்கும்படி சித்தராமையா அவரது கட்சியினருக்கு உத்தரவிட்டார். ஆனால் அந்த முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை. குமாரசாமி மைசூருவிலேயே தங்கி எங்கள் கட்சி கவுன்சிலர்களை வேறு கட்சிக்கு செல்லாமல் பாதுகாத்தார். காங்கிரசுக்கு மேயர் பதவி வேண்டும் என்று நினைத்த சித்தராமையா, எங்கள் கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி இருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.